மனசு_பற்றி_என்_புரிதல்

#

நம்மில் பலரும் தினமும் அன்றாட பேச்ச வழக்கில் பயன்படுத்தும் ஒரு சில வார்த்தைகளில் இதயம், மனது போன்ற  சொற்கள் முக்கியமாக இடம் பெறும்!

மனிதனுக்கு  மனது  என்பது எங்கே உள்ளது?  இந்த கேள்வி பலரைப்போல என் மனதிலும் எழுந்தது! மனது என்பது நம் உடல் உறுப்பாக இருக்குமோ?! எல்லா மனிதனுக்கும் இதயம் இருக்கிறது; மூளை இருக்கிறது , நுரையீரல் இருக்கிறது; ஏன் ஈரல் கூட இருக்கிறது; ஆனால் மனசு என்ற ஒன்று உடலில் எந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது?! இது ஒரு உறுப்பா?! இல்லை ஒருவரின் உணர்வா?! அல்லது பல உறுப்புகளின் கூட்டுமுயற்சியால் கிடைக்கும் உணர்ச்சிகளின் விளைவா?!

பொதுவாக நாம் நமது தினசரி  சம்பாஷணைகளில் இந்த மனுஷனுக்கு மனசு ஒன்று இல்லவே இல்லையா இப்படி கொடூரமான காரியம் செய்துவிட்டானே என்பார்கள்! ஒரு சிலரோ இவனுக்கு இதயமே இல்லையா கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் இப்படி காட்டுமிராண்டியாய் நடந்து கொள்கிறானே என்பார்கள்! இதயம் இல்லாமல் ஒருவனால் உயிரோடு இருக்க முடியுமா?! அப்படியாயின் இதயத்திற்கும் ஒருவரின் உணர்ச்சிகளுக்கும் ஏன் முடிச்சு போட வேண்டும்?!  ஒரே குழப்பமாக இருக்கிறதல்லவா! எனக்கும் அப்படித்தான் இருந்தது, ஆனால் குழுப்பிய குட்டையில் முடிவில் நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்குமல்லவா !

நம்மில் சிலரோ தனது காதலையும் அன்பையும் ஆசையையும் தன் மனதிலேயே பூட்டி வைத்திருப்பதாகவும் வேறு சிலரோ தன்  காதலியையோ அல்லது தம்மீது பிரியம் கொண்டவர்களையோ தன் மனதிலும் இதயத்திலும் வைத்து சுமப்பதாகவும் சொல்கிறார்கள்! அது ஒருவேளை உண்மை என்று கொண்டால் இதயம் என்பது மனிதனின் உணர்வுகளை சுமக்கும் “கேரி பேக்கா” என்ன?!  நினைத்து பார்க்க வேடிக்கையாக  இருக்கிறதல்லவா!

காதல்,கருணை,அன்பு ,ஆசை கொடூரம் போன்ற மனிதனின் பலதரப்பட்ட  உணர்ச்சிபூர்வமான உணர்வுகள் மனதால் எனப்படும்  இதயத்தால் உண்மையில் உருவாக்கபடுகின்றனவா? இந்த உணர்வுகளுக்கு இதயத்திற்கும் ஏதாவது நேரடி அல்லது மறைமுக தொடர்பு உள்ளதா?! 

ஒருவேளை இவையெல்லாம் சரியென்று ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் நமக்கு எழும் அடுத்த சந்தேகம் நமது மூளை என்ன செய்கிறது?!  அதற்கும் நமது உணர்வுகளுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?! உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் என்பது இதயத்திலிருந்து மட்டும் வெளிப்படும் ஒரு செயலா? இதயத்தால் மட்டும் ஒரு மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியுமா?!  இதில் மனிதனின் மூளையின் பங்கு என்ன?! ஏன் மனித உணர்ச்சிகளில் மனித மூளை இருட்டடிப்பு செய்யப்பட்டு மனசு (இதயம்)மட்டும் வெளிபடுத்தப்படுகிறது?!

என்னுடைய புரிதலை பொறுத்தவரையில் உண்மையில் எந்த மனிதருக்கும் மனசு என்பது ஒன்று இல்லவே இல்லை. மனசு என்பது மனிதனின் கற்பனையே! அதேசமயம் அது  மூளையின் பினாமி பெயர் என்பது என் புரிதல்! அதேபோல் யாரையும் நாம் நமது மனதிலும்  இதயத்தில் சுமப்பதுமில்லை! நமது மூளையின் எண்ண நினைவலைகளில் சுமக்கப்படுவது மட்டுமே உண்மை!

ஒருவரின் மூளைதான் அதன் உணர்ச்சிகள் மற்றும் அதன் மூலம் வரும் விளைவுகளுக்கும் முழு காரணகர்த்தாவாக இருக்க வேண்டுமல்லவா! என்னதான் மூளை இதற்கு காரணகர்த்தாவாக  இருந்தாலும் அதன் பலாபலனையும் விளைவுகளையும்  நேரடியாக அனுபவிக்கும் உறுப்பு இதயம்(மனசு)! ஆம் ஒருவரின் இதயத்தின் மறைமுக வில்லன் மூளையோ!

ஒரு சரியான அல்லது தவறான செயலை /காரியத்தை செய்ய மாஸ்டர் பிளான் செய்து கொடுப்பது  ஒருவரின் மூளையாக இருந்தாலும் அந்த காரியத்தால் வரும் விளைவுகள் இதயத்தை நேரடியாக பாதிக்கின்றன அல்லவா!  உதாரணத்திற்கு ஒரு மகிழ்ச்சியான செயல் நடந்துவிட்டால் இதயம் மிக மென்மையாக  செயல்பட்டு  நம் மூளையை மகிழ்ச்சி அலைகளில் திளைக்க செய்கிறதல்லவா!

அதே நாம் ஒருவேளை ஏதாவது தவறான காரியம் செய்து விட்டால் அதே இதயம் உடன் எதிர்வினை புரிந்து அதிகமாக படபடப்பை ஏற்படுத்தி மூளைக்கு அழுத்தத்தை கொடுத்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் நமது உடலில் ஒரு அசாதாரண  சூழுலை ஏற்படுத்தி நமக்கு நிம்மதியற்ற ஒரு நிலையை ஏற்படுத்துகிறுது அல்லவா?!  இது தானே ஒரு நல்ல இதயத்தின் அடையாளமாக இருக்க வேண்டும்!

ஒருவேளை மனிதனின் மூளை அவனுக்கு தவறான காரியம் செய்ய தூண்டி அதை செய்யும்போது அவனது இதயம் எந்த படபடப்பும் இன்றி அமைதிகாத்து அந்த செயலை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கிறது என்றால் அங்கே தான் ஒரு குற்றவாளி உருவாக்கபடுகின்றான்?!

மூளை ஆணையிடும் நல்ல திட்டங்களை நமது இதயம் எந்த பதற்றமின்றி செய்தும் அதே மூளை ஆணையிடும் தவறான திட்டங்களுக்கு நமது இதயம் ஒருவித படபடப்பை ஏற்படுத்தி நமக்கு அலர்ட் செய்து அந்த தவறை உணர்த்தவில்லை என்றபட்சத்தில்  மனிதன் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்து வளர்ச்சி பெற்ற குற்றவாளியாகின்றனல்லவா!

ஒருவேளை அந்த இதயம் மூளையின் தவறான திட்டங்களுக்கு  செவி  சாய்க்காமல் உடன் எதிர்வினை புரிந்து  படபடப்பை ஏற்படுத்தி  நம்மை அந்த செயலை செய்யவிடாமல் தடுத்தால் அங்கே அந்த இதயம் தன் செயலை செவ்வனே செய்து நல்ல செயல்பாட்டில் உள்ளது எனக்கொள்ளலாம் அல்லவா! எனவே ஒருவனின் மூளை சொல்லும் செயலைவிட தன் இதயம் சொல்லும் வழிப்படி நடந்தால் தவறுகள் குறைய அது வாய்ப்பாக அமையுமல்லவா!

அதனால் தான் நாம் ஒரு கொடூர செயலை செய்பவனை ஒருவேளை  இதயமற்றவன் என சாடுகிறோமா?! 

ஆம்! ஒரு தவறான செயலை செய்பவர் அவருக்கு இதயம் இருந்தும்  அது அதன் பணியை சரிவர செய்து தடுக்க தவறியதால் இதுபோன்ற தவறு செய்பவர்ளை பொதுவாக “இதயமற்றவன்” என நாம் அழைக்கப்டுகின்றோம்!

இந்த ஒட்டு மொத்த கூட்டுபாதிப்பின் உணர்வை தான் ஒருவேளை நாம் மனசு என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிடுகிறோமோ!

நூரேஸ்கே   (எ) காதர் - அமீரகம்

Comments

Popular posts from this blog

ஊர்களின் பெயர்கள்

பயணங்கள் முடிவதில்லை!