#விவசாயம்_அழிவு_பற்றி எனது பார்வை
#விவசாயம்_அழிவு_பற்றி
சற்று காலச்சக்கரத்தை பின்னோக்கி பார்த்தால் பெரும்பாலான நம் பெற்றோர்கள் விவசாயிகளாகவோ அல்லது விவசாயம் சார்ந்த தொழிலை பிரதானமாகவோ செய்து அதன் மூலம் ஈட்டிய வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார்கள்/ வாழ்ந்தார்கள் .
ஆனால் விளைவு விவசாயத்தில் கிடைத்த வருமானம் “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் இருந்த காரணத்தால்” பல்வேறு கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் இடையில் உழன்று அவர்கள் குறைந்தபட்சம் தன் சந்ததியினரை மேல்படிப்பு படிக்க வைத்தார்கள் .
அதன் பலன் நம்மில் பெரும்பாலானவர்கள் டாக்டர்களாகவோ இன்ஜினியராகவோ வக்கீல்களாகவோ வாத்தியாரகளாகவோ அல்லது இன்னும் பல துறைகளில் படித்து மிளிரினோம் /மிளிர்கிறோம்
தன் மகளோ / மகனோ தான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்காமல் அவர்கள் வாழ்நாளில் நல்ல வருமானம் பெற்று, வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று நல்ல நிலையில் இருக்க வேண்டும் என எண்ணியது அந்த பெற்றவர்கள் செய்த தவறா?! அல்லது படித்த நாம் விவசாயத்தையோ அல்லது அதன் சார்தொழிலையோ சற்று ஒதுக்கி வைத்து தான் படித்த துறை சார்ந்த தொழில் செய்து அதன் முலம் வருமானத்தை பெற நினைப்பது / நினைத்தது தவறா?!
எந்த பெற்றோரும் (என்னையும் சேர்த்து தான்) தன் சந்ததியினர் ஒரு விவசாயமோ அல்லது அதன் சார்ந்த தொழில் படிப்பை படிக்க வைக்க விரும்பவில்லை. அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளை தான் நாம் இன்று அறுவடை செய்கிறோம்.
சரி ஏன் எல்லோரும் ஒட்டு மொத்தாமாக விவசாயத்தையோ அதன் சார் தொழில்களையோ பின்னுக்கு தள்ளிவிட்டு வேறு தொழில் செய்ய விரும்புகிறார்கள்.
மேலே கூறியது போல விவசாய வருமானம் இப்போது இருக்கும் செலவினங்களுக்கு ஈடு கொடுப்பதில்லை. அதையும் மீறி சிலர் துணிச்சலாக செய்து வந்தால் அவர்கள் வட்டி மூசாக்களிடம் கடன் பெற்று அதன் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகிவிடுகின்றனர்.
விவசாய பொருட்களுக்கு விவசாயி விலை நிர்ணயித்து விற்கும் நிலை எப்போது வரும்?! அரசாங்கம் மற்றும் கமிட்டி மூலம் விற்கப்படும் விவசாய விளைபொருளுக்கு நல்ல விலை கிடைப்பதில்லையே ஏன்?!
பணப்பயிர்களாக கருதப்பட்ட கரும்பு வாழை பயிர்களுக்கு கூட நல்லவிலை கிடைப்பதில்லை ஏன்? ஏன் விவசாயிகள் சுரண்டப்படுகிறார்கள். இதற்கு யார் மூல காரணம்?! நிர்வாகமா?! அரசாங்கமா?! அதில் உள்ள சீர்கேடுகளா?! இல்லை விவசாயிகளா?!
விவசாயிகளுக்கு வங்கிகள் சலுகை கடனில் கடன் கொடுக்கின்றன ஏன் அங்கே போவதில்லை என கேட்பீர்கள் விவசாய கடன் சலுகைககளை பணமுதலைகள் அல்லது அந்த ஏரியாவின் செல்வாக்கு பெற்றவர் வங்கிகளை தன் கையில் போட்டு தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர் . விவசாய கடன் 1% சதம் மட்டுமே உண்மையான விவசாயிக்கு கிடைக்கிறது. அதைப்பெறவும் அந்த விவசாயின் கோமனம் விபரம் முதற்கொண்டு அந்த வங்கிகள் பெற்றுக்கொள்கின்றன.
விவசாய விளைபொருளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதில்லை. வரவை விட செலவு கூடுதலாகி விவசாயிகளுக்கு கடன் தொல்லை கழுத்தை நெறிக்கிறது. ஆனால் அதேசமயம் விவசாய பொருட்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள் நன்கு கொழுக்கிறார்கள்.
நிலநீர் ஆதாரம் திருப்திகரமாக இல்லை. மழையும் கைவிட்டு விட்டது. மழையோ ஒன்று அதிகம் பெய்து கெடுக்கிறது அல்லது பெய்யாமல் கெடுக்கிறது . நிலத்தடி நீர் அதளபதாளத்தில் சென்று விட்டது முன்பு நாற்பது அடியில் கிடைத்த நீர் இப்போது நானூறு அடியில்!.
அணைகள் , ஆறு மற்றும் ஏரிகள் வாய்கால் பாசன மேலாண்மை தூர் வாறாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதனால் மழை நீர் மேலாண்மை சிதைந்து கடைமடை வரை விவசாய பாசனத்துக்கு நீர் கிடைப்பதில்லை.
ஆறு ஏரிகளில வரைமுறையின்றி மணல் அள்ளிய காரணத்தால் ஆற்றுபடுகைகளின் அருகே கூட நீலத்தடி நீர் அதளபதாளத்திற்கு சென்றுவிட்டது.
ஒருவேளை நீலத்தடி நீர் இருந்தாலும் அதை பயன்படுத்த போதிய அளவுக்கு மின்சாரம் இல்லை. விவசாயிகளுக்கு மும்முனை இணைப்பில் கடுமையான தட்டுபாடு உள்ளது.
இயற்கை சீற்றங்களை ஈடுகட்டி விவசாயகளின் நலன் காக்க நல்ல காப்பீட்டு திட்டம் இதுவரை இல்லை.அப்படி இருந்தாலும் அந்த திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை.
இவை எல்லாம் விட நவீன விவசாய யுக்கிகள் நம் விவசாயிகளுக்கோ அதன் சந்ததியினருக்கோ கற்றுக்கொடுக்க முனைப்பு எடுக்கப்டவில்லை. குறைந்த நீரில் அதிக மகசூல் செய்வது எப்படி, குறைந்த இடத்தில் அதிக வருமானம் வரும் வகையில் விவசாயம் செய்வதெப்படி. அபிவிருத்தி அதிகறிக்க உற்பற்றி பெருக்க நவீன ரக உபகரணங்களை பயன்பதுத்துவது எப்படி. குறைந்த செலவில் குறைந்த தொழிலாளர்களை கொண்டு நவீன விவாசாய உபகரணங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது எப்படி. பருவத்துக்கு ஏற்ப பயிரை தேர்ந்தெடுப்பது எப்படி. மழை பெய்தால் என்ன பயிர் செய்ய வேண்டும் அது பொய்த்தால் என்ன பயிர் செய்து லாபம் பெறலாம் போன்ற இன்னபிற விஷயஙகள் விவசாய வர்க்கத்துக்கு எத்திவைக்கப்படவில்லை. இதற்கு யார் காரணம்? விவசாயிகளின் அறியாமையா ? அல்லது அரசாங்கத்தின் / நிர்வாகக்தின் இயலாமையா?!
அன்று விவசாயி அவன் விளைபொருட்களுக்கு விலை வைக்கவில்லை இருப்பினும் சமாளிக்க முடிந்தது காரணம் அன்று விவசாயம் இடுபொருட்களான விதை நெல் , உரம் போன்றவற்றின் விலை கொடுத்து வாங்கவில்லை அப்டி வாங்கினாலும் அது கட்டுக்குள் இருந்தது. அன்று தொழிலாளிகள் சொற்ப சம்பளத்தில் ஏர் ஓட்ட, களை பிடுங்க, அறுவடை செய்ய இன்னபிற விவசாய வேலைகளுக்கு தயாராக இருந்தனர் ஆனால் இன்றோ விவசாய வேலை செய்ய ஆட்களே கிடைப்பது இல்லை அப்படி கிடைத்தாலும் அதிக ஊதியம் கேட்கிறார்கள் . கிராமங்களில் நவீன விவசாய முறையில் குறைந்த செலவில் குறைந்த தொளிலாளர்களை கொண்டு விவசாயம் செய்ய தேவையான விழிப்புணர்வு இல்லை. அப்படி இருந்தாலும் அதை நம்முர் விவசாயிகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த போதிய பொருளாதார வசதிகள் இல்லை. அழகாக இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளை பயன்படுத்தி வந்த நம்முர் விவசாயிகளை (வியாபார உக்தியின் பின்னணி நிறுவனங்கள் செய்த சதியால் மற்றும் நமது அரசாங்களின் ஒத்துழைப்பால்) ரசாயன உரம் பயன்படுத்த மட்டும் நன்றாக கற்று கொடுத்து விட்டனர். ஆனால் இந்த ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளின் விலை எண்ணெய்விலை உலகமயமாக்கலால் தாறுமாறாக விலை ஏற்றம் பெற்றுள்ளது...இதை வாங்கி விவசாயம் செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. இயற்கையான மாட்டு சாணத்தை உரங்களாகவும் வேப்பிலை புண்ணாக்கை பூச்சிகொல்லிகளாகவும் காலங்காலமாக பயன்படுத்தி வந்த விவசாயின் நடைமுறையை வெளிநாட்டு வியாபார நிறுவனங்கள் செய்த சதியின் விளைவால் அந்த சதிக்கு நம்முர் அரசாங்கள் கொடுத்த ஒத்துழைப்பால் நவீன தலைமுறையினர் இயற்கை விவசாயத்தை மறந்தே போய்விட்டனர் . ஆனால் செயற்கை ரசாயானத்தை வைத்து நமது இயற்கை விவசாயத்திற்கு ஆப்பு வைத்த நாடுகள் இன்று ஆர்கானிக் விவசாயம் என்ற ஆங்கில பெயர் வைத்து நம் கற்றறுக்கொடுத்த பண்டைய விவசாய முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்து அதன் மூலம் விளையும் விவசாய பொருட்களை ஆர்கானிக் விளைபொருட்கள் என்று கட்டங்கட்டி அதிக விலைக்கு விற்கின்றனர். இதை நாம் என்றென்று சொல்வது? இதில் யார் இளிச்ச வாயார்கள்?
நண்பா நான் இன்றும் ஆள் வைத்து விவசாயம் செய்து வருகிறேன். அதன் முலம் கிடைத்த அனுபவத்தை தான் இன்று பக்கம் பக்கமாக எழுதிவருகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம் விவசாயத்தில் இன்று வருமானத்தை விட செலவுகள் மட்டும் அதிகமாகிவிட்டது. அல்லது இலாபமோ நஷ்டமோ இன்றி ஓரே நேர்க்கோட்டில் உள்ளது...உழவன் கணக்கு பார்த்தால் உலக்கையும் மிஞ்சாது என்றார்கள் பெரியவர்கள்...
Comments
Post a Comment